Monday, September 29, 2014


  அறிவை அழித்த ஆல்கஹால்

   ஒற்றுமை, வேற்றுமைகள் நிறைந்த இவ்வுலகில் பல கோடி உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் அனைத்து வகையான உயிரினங்களும் தங்கள் இனம் வரையிலாவது பாதுகாப்பு ஏற்பாடுகளை செவ்வன செய்து தங்களை பாதுகாத்து கொள்கின்றன. ஆனால், சற்று விந்தையாக தனக்கு தானே அ ழி வை தேடி கொள்ளும் ஓர் அரிய உயரினம் என்றால், அது ஆறறிவு படைத்த மனித இனமேஆகும்.ஒன்று, தன் சுயநலத்திற்காக மற்ற மக்களை அழிக்கும் வழியில் ஈடுபடுவது அல்லது சுயமாக தன்னை தானே அழித்து கொள்வது. இதில் இரண்டாம் வழியில் மனித இனம் மாண்டு மடிவதற்கு ஒரு முக்கிய அங்கமாக திகழ்வது குடிப்பழக்கம்.  
             குடிப்பது என்பது தனி மனித சுதந்திரம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அது அவ்வாறன்று.குடியால் பாதிக்கபடுவது ஒருவர் மட்டும் இல்லை, அவரை சார்ந்த குடும்பம், சமுதாயம் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது என்பது தான் எதார்த்தமான உண்மை.குடிப்பபழக்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு சமுதாயத்தின் அமைதியையும் நிம்மதியையும் சிதைக்கின்றது.குற்றங்கள்,விபத்துகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடக்க ஒரு முக்கிய காரனியாக இருகின்றது. ஆனால், இங்கு மதுவை அரசாங்கமே விற்கின்றது என்பது தான் வினோதமான வேடிக்கை.
          அரசாங்கம் என்பது மக்களின் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மக்கள், சமுதாயத்தில் சீர் தூக்கி சுய மரியாதையுடன் வாழ்வதற்கான திட்டங்களை தீட்டி அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால் இங்கு அரசு என்னதான் நல திட்டங்களை வகுத்தாலும், மது விற்பனை மற்ற எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி, மக்கள் மத்தியில் ஒரு நேரெதிர்மாற்றத்தை உருவாக்கி வருகிறது.அரசுடைமையாக இருக்க வேண்டிய பல துறைகளை தனியாரிடம் தாரைவார்த்து கொடுக்கும் அரசு, தனியாரிடம் கூட இருக்க கூடாத நிறுவனத்தை தன் வசம் வைத்திருப்பது தான் வேடிக்கை.
கள்ள சாராய சாவு, தனியார் துறை ஆதிக்கம் போன்ற பல்வேறு காரனங்களை மையப்படுத்தி மது விற்பனையை தொடங்கிய அரசால், மது விற்பனை , மது சாவுஎண்ணிக்கை போன்றவற்றை குறைக்க முடியவில்லை. மாறாக, இவை இரண்டும் பன் மடங்கு அதிகமாகி உள்ளது .2001 ஆம் ஆண்டு 18.32 கோடி லிட்டராக இருந்த மது மற்றும் பீர் உற்பத்தி,2011 ஆம் ஆண்டு 61.75 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. 1993 ஆம் ஆண்டு  முதல்  2002 ஆம்  ஆண்டு  வரையிலான காலகட்டத்தில்  வாகன  விபத்துகளில்  90000 பேர்  இறந்துள்ளார்கள் .2003 ஆம்  ஆண்டு முதல்  2013ஆம்ஆண்டு  வரை  1,40,686 பேர்  இறந்து  உள்ளனர்.  இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதால் இறந்தோரின் எண்ணிக்கை மட்டும் 75 விழுக்காடிற்கும் அதிகம். மேலும், இது வெறும்  விபத்துகளால் ஏற்பட்ட  இறப்புகளின் புள்ளி விவரம்மட்டுமே.குடியால் உடல் உறுப்புகள் அழிந்து இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டே போகின்றது.கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்து சமுக சீர்கேடுகளும் பெருகி கொண்டே போகின்ற.அனைத்து கற்பழிப்பு செய்திகளிலும் அடிப்படை வரியாக, குடி போதையில் கற்பழித்தனர் என்ற வரி தவறாமல் இடம் பெறுகிறது.சாதாரண வாய் தகராறு முதல் அனைத்து வெட்டு குத்து  நிகழ்வுகளுக்கும்மதுவே அடிப்படை காரணமாக உள்ளது.
    இதில் பெறும் கவலைக்குரிய விஷயமாக, கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களிடம் மது கலாச்சாரம் மிக வேகமா பரவி வருகின்றது.2013 ஆம் ஆண்டில் விடுதிகளில் மட்டும் மாணவர்கள் குடிப்பது 40% உயர்ந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று. எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்கள் மதுவை நோக்கி பயணிப்பது ஆபத்தானது. இதை முளையிலே கிள்ளி எறிய அரசு கடுமையான விதிகள் மற்றும் மது கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.
      இது மட்டுமின்றி, மதுவால் தனது கணவரை, தந்தையை , சகோதரனை இழந்த குடும்பங்கள் தமிழகத்தில் ஏராளம்.மது பழக்கத்தினால் ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அதன் காரணமாக பெண்களும் தங்கள் பிள்ளைகளுடன்    தற்கொலைக்கு முயல்வது அன்றாட   செய்தியாக  உள்ளது  .        
            மது விற்பனையால் அரசாங்கத்திற்கு கிடைப்பது வருவாய் மட்டுமே .வருவாய் ஈட்டுவதுமட்டுமேஅரசாங்கத்தின் பணி அல்ல.மக்களின்  வாழ்வாதரத்தையும் சரியான போக்கில் மேம்படுத்த வேண்டும். மதுவை ஆதரிக்கும் எந்த ஒரு தனி மனிதனாலோ, சமுதாயத்தாலோதாங்கள் எதிர் பார்த்து உழைக்கும் எந்த ஒரு உன்னத லட்சியங்கள் மற்றும் கனவுகளை அடைவது கடினமான ஒன்றாகிவிடும்.மதுவைஅரசாங்கம் மட்டும் விற்கவில்லை,  மக்களும் பல நேரங்களில் ஆதரிகிறார்கள் என்பதை, பண்டிகை நாட்களில் நடைபெறும் மது விற்பனை அளவைகொண்டு அறியலாம்.
         நேரடியாக பார்த்தல் மதுவால் லாபம் ஏற்படுவது போல தோன்றும்,ஆனால் அதனை ஆழமாக சிந்தித்தால் அதன் நட்டத்தை எந்த விலை கொடுத்தாலும்  ஈடுகட்ட முடியாது.மதுவால் ஏற்படும் மற்ற பாதிப்புகளைவிட சிந்திக்கும் ஆற்றல் தான் முதலில் பாதிப்புக்குள் ஆகும். ஒரு சமுதாயத்தின்சிந்திக்கும் ஆற்றல் குன்றிவிட்டது என்றால், அது சமூக மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைகல்லாகிவிடும்.எனவே அரசுடன் சேர்ந்து மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் மது ஒழிப்பு எளிதான ஒன்றே.
                                                 - அ.முகமது யூசுப்

No comments:

Post a Comment